Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Monday, March 18, 2013

லேசிக் சிகிச்சைக்கு பிறகு


ஆபரேஷன் முடிஞ்சதும் பெட்ல எல்லாம் படுக்க வைக்கல. அப்படியே கைய புடிச்சு கூட்டிட்டு போய்  ஒரு சேர்ல உக்கார வைக்கறாங்க.சினிமால காட்டற மாதிரி முருகன் போட்டோ, நமக்கு வேண்டியவங்க எல்லாம் முதன்முதல்ல காட்டல. டாக்டர் தான் நமக்கு முன்னாடி வந்து கண்ணை திறந்து பாருங்கன்னு சொல்றாரு. அவரை பார்த்ததுக்கு அப்பறம் தான் நானா தேடி எங்க வீட்டுக்காரர் எங்கன்னு பார்த்தேன். அவர் தியேட்டருக்கு வெளில நான் வந்துட்டேனான்னு எட்டி பார்த்துட்டு இருந்தார். ஹப்பாடா... அவர் முகத்தை மறுபடியும் (அதுவும் தெளிவா) பார்க்க முடிஞ்சுதேன்னு  கடவுளுக்கு நன்றி சொல்லிகிட்டேன்.


அப்பறம் மறுபடியும் ஒரு முறை விஷன் செக் பண்ணிக்கறாங்க. எல்லாம் சரியா இருந்தா மாத்திரை, சொட்டு மருந்தை எப்ப எப்படி உபயோகிக்கணும்னு ஒரு கிளாஸ் எடுத்துட்டு கிளம்ப சொல்லிடறாங்க. வீடு பக்கம் என்பதால் நான் கணவரின் பைக்கிலேயே வீட்டுக்கு வந்துட்டேன். ஒண்ணும்  பிரச்சனை  இல்ல.ஸோ  லேசிக் ஆபரேஷன  தைரியமா பண்ணிக்கலாம். ஒண்ணும் பயப்பட தேவையே இல்ல.ஆபரேஷனுக்கு பயந்துகிட்டு இந்த காலத்துல யாராவது குழந்தை பெத்துக்காம இருக்காங்களா? அது மாதிரிதான் இதுவும்.ஒண்ணும்  பயப்படாதீங்க.... பார்வை குறைபாடு  தைரியமா ஆபரேஷன் பண்ணிக்கங்க.
பொதுவான கட்டுப்பாடுகள்( குறைந்தது ஒரு மாதத்துக்கு):
1. பளீரென்ற ஒளியை பார்ப்பதை தவிர்க்கணும்

2. டிவி, கம்ப்யூட்டர் பார்ப்பதை குறைந்தபட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் 2 வாரம் விட்டு விடுங்கள். மனக்கட்டுப்பாடு இல்லாமல் பார்த்தால் கண்களில் பிரச்சனையை வரும்.

3. முகம் கழுவுதல், தலைக்கு குளித்தல் ஆகியவை டாக்டர்  சொன்ன பிறகு மட்டுமே செய்யவும். தண்ணீரில் கிருமிகள் இருந்தால் காலத்துக்கும் கண்ணில் பிரச்சனை நிரந்தரமாகி விடும். ஆபரேஷன் அன்று தலைக்கு குளித்துக்கொள்வது  உசிதம்.

4. மொபைல் உபயோகித்தல் ரேடியேஷன் பிரச்சனை  ஏற்படுத்தும் என்பதால் குறைந்தது 3 நாட்களுக்காவது தவிர்க்கவும்.

5.  ஒரு வாரம் புத்தகம் படித்தல் கூட வேண்டாம்

6. தூசு படாமல் பார்த்துக்கணும்.

7. கண்களை எக்காரணம் கொண்டும் தேய்க்க கூடாது.

8. ஒரு மாசத்துக்கு தூங்கும்போதும் ஹாஸ்பிடலில் தந்த கண்ணாடி அணிந்தே தூங்க வேண்டும். அப்ப தான் நாம நம்மளையும் அறியாம கண்ணை அழுத்தாம இருப்போம்.

9. புருவம் எடுத்தல், பேசியல் போன்றவற்றுக்கு ஒரு மாதமாவது (சரியான  கால அளவு தெரியல) லீவ் விட்டுடுங்க. ஆபரேஷன் முன்பே வேணா செஞ்சுக்கங்க. கண் மை கூட தவிர்த்துடுங்க .

10. ஷவரில் குளிக்கும்போது கண்களில் தண்ணீரின் சாரல் எப்போதும் நேரடியாக விழக்கூடாது.

11. உடற்பயிற்சிகள் , நீச்சல், நீர் நிறைந்த குடம், பக்கெட் போன்ற பளு தூக்குதல் வேண்டாம்.

12. ஆபரேஷனுக்கு பிறகு இரண்டு கண்களையும் ஒன்றை மறைத்து ஒன்று எப்படி தெரியுதுன்னு பார்க்க கூடாது. அது கண் பார்வையை பாதிக்குமாம்.

13. குறைந்தது 3 டிராப்ஸ் தருவாங்க. ஒவ்வொண்ணையும் குறைந்தது 5 நிமிட இடைவெளிக்கு பிறகே உபயோகிக்க வேண்டும்.

14. Life time க்கு வண்டியில போகும்போது plain glass போட்டுக்கணும். அப்பதான் தூசி மற்றும் கண்கள் காற்றில் காஞ்சு போறதுல இருந்து கண்களை பாதுகாக்க முடியும்.

15. இவ்வளவு சொல்றாங்களேன்னு கண்ணை மூடியே வைக்க வேண்டிய அவசியமும் இல்லை. கண்கள் விழித்திருப்பதும் அவசியம்.

அவ்ளோதாங்க அட்வைஸ் .
ஹாங்.... சொல்ல மறந்துட்டேனே..
டாக்டர் கிட்ட லேசர் பண்ணிக்க பயமா இருக்கு. ஒவ்வொருத்தர் ஒவ்வொன்னு சொல்றாங்கன்னு சொன்னப்ப டாக்டர் என்ன சொன்னார் தெரியுமா?
"யார்கிட்டயும் இதை பத்தி கேக்காதீங்க முக்கியமா நெட்ல இதை பத்தி எல்லாம் படிக்காதீங்க"

Wednesday, February 27, 2013

நிஜமாவே ஒளி படைத்த கண்கள் கிடைச்சாச்சு

எங்க அம்மா அப்பாவோட பயத்தின் காரணமாவே நான் இழந்த நல்ல விஷயங்கள் ஏராளம். அதில் ஒன்று லேசிக் சிகிச்சை. லேசிக் சிகிச்சையும் தெளிவான கண் பார்வையும் எனக்கு கனவாகவே இருந்தது. கொச்சையா சொல்லப்போனா குருட்டு கண்ணோடவே  நான் இருபது வருஷம் கழிக்க வேண்டி இருந்தது . லென்ஸ் வெச்சுக்கறதுக்கே தலையால தண்ணி குடிக்க வேண்டி இருந்துச்சு. (நீங்க போட்டோல பார்க்கறது லென்ஸ் கண்கள் தான்) அப்பவும்  ஆபரேஷன்க்கு நோ தான்.  ஒரு வழியா இப்பதான் எல்லாம் கூடி வந்துச்சு. ஆமாங்க.. நான் கண் ஆபரேஷன் செஞ்சுகிட்டேன். அது சம்பந்தமான அனுபவம் தான் இந்த பதிவு.

பொதுவா இந்த லேசர் ஆபரேஷன் சாதாரணமா பண்றத விட ஒவ்வொரு ஹாஸ்பிடலும் Offer விடுவாங்க, அப்ப  செஞ்சா செலவு பாதியா குறையும். இந்த முறை அகர்வால் ஹாஸ்பிடல்ல Offer ல ஆபரேஷன் பண்றதா விளம்பரம் பண்ணி இருந்தாங்க. சரி விசாரிச்சு பார்த்தோம்.

உள்ளூரிலேயே ஹாஸ்பிடல். தங்கும்  செலவும் போக்குவரத்து செலவும் கிடையாது. டீல்  நல்லா இருந்துச்சு.அதனால் நேரில் போய்  விசாரித்தோம். கண்களை செக் பண்ணி பார்த்துட்டு 'அடிப்படை விஷயங்கள் ஓகே. நீங்க ஆபரேஷன் பண்ணிக்கறதா இருந்தா கண்களை ஸ்கேன் செய்து உங்க கண் ஆபரேஷன்க்கு தகுதியானதான்னு தெரிஞ்சுக்கணும். அதுக்கு ஒரு 2500 ஆகும். உங்களுக்கு ஓகேன்னா நாளைக்கு வாங்க'ன்னு சொன்னாங்க.

அடுத்தநாள் போனேன். விதவிதமா செக் பண்ணி, கலர் கலரா பிரிண்ட் எடுத்து குடுத்தாங்க. அதை எடுத்துட்டு போய்  டாக்டர்ட்ட காட்டினேன். டாக்டர் பார்த்துட்டு, 'உங்க கண் ஆபரேஷன் பண்ண தகுதியா தான் இருக்கு.  தனி ஒருத்தருக்கு பண்ணினா செலவு அதிகமாகும். ஒரு ப்ளேடுல மூணு பேருக்கு பண்ணலாம். அதனால ஆள் சேர குறைஞ்சது  ஒரு வாரம் ஆகும். ஆபரேஷன் ரெண்டு நாள் முன்னாடியே சொல்லிடுவோம். அதுவரைக்கும் நீங்க லென்ஸ் வைக்க கூடாது. ஏன்னா கருவிழியில டைரெக்டா அது டச் ஆகும். பிரச்சனை வரும்'ன்னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே லென்ஸ் வைக்காம கண்ணாடி போட்டுக்கிட்டேன்.

ஒரு வாரம் கழிச்சு போன்:
 நாளைக்கு உங்களுக்கு லேசிக் ஆபரேஷன்னு போன் வந்துச்சு. சடார்ன்னு ஒரு பரபரப்பு, பயம், Excitement, எல்லாம்... Final Destination படத்துல ஒரு பொண்ணு லேசிக் பண்ணிக்கற சீன்  வரும். அது ஒரு accident ல போய்  முடியும். அதெல்லாம் ஞாபகத்துக்கு வர ஆரம்பிச்சுடுச்சு. பயப்பட ஆரம்பிச்சுட்டேன். அப்பறம் எங்க அம்மாவும், கணவரும் தான் தைரியம் குடுத்தாங்க. அடுத்த டைம் water theme park போனா கண்ணாடி, லென்ஸ் பத்தி கவலைபடாம என்ஜாய் பண்ணலாம். அதை நினைச்சுக்கோ ன்னு எங்க ஆத்துக்காரர் சொன்னார்.அதையே புடிச்சுக்கிட்டு பாசிடிவாவே நினைக்க ஆரம்பிச்சுட்டேன்.

அடுத்த நாள்: 
 
மத்தவங்க கிட்ட சொன்னா தேவை இல்லாம பயப்படுத்துவாங்கன்னு சொந்தபந்தம் யார்கிட்டயும் சொல்லாம, எங்க ரெண்டுபேர் அம்மா அப்பா, நாங்க ரெண்டு பேர் மட்டும் (இதுவே 6 பேர் ஆச்சு) போனோம். நெகடிவ் எண்ணங்கள் முளைத்தாலும் வளர விடாமல் பார்த்துக்கொண்டேன். இதற்கு முன் எடுத்த அடிப்படை ரிசல்டை மீண்டும் ஒரு முறை செக் பண்ணிகிட்டாங்க.அப்பறம்  ஆபரேஷன் தியேட்டர் முன்னாடி காத்திருந்தோம். நெர்வஸ் ஆக ஆரம்பிச்சுது. ஒருவேளை கண் போயிடுச்சுன்னா  என் கணவர் முகத்தை மறுபடி பார்க்க முடியுமான்னு எல்லாம் தோணுச்சு . நான் பயப்பட்டா எங்க அம்மா அப்பாவும் பயப்படுவாங்கன்னு இயல்பா காட்டிகிட்டேன். உண்மையில் என் கணவர் மிகப்பெரிய பூஸ்ட். அவர் எங்களை பயப்பட விடவே இல்லை. I should thank him!

operation theatreக்கு உள்ள வாங்கன்னு கூட்டிட்டு போனாங்க. அது வரைக்கும் அப்படி ஒரு இடத்தை நான் பார்த்ததே இல்லை.த்ரில், சந்தோஷம், பயம், எல்லாம் கலந்த ஒரு உணர்ச்சியோட உள்ளே போனேன். எதுக்கும் கடைசியா எங்க வீட்டுக்காரர் முகத்தை ஒருதரம் பார்த்துக்கிட்டேன். ( ஹஹஹா. ஓவரா இருக்குல ).


உள்ள ஒரு கட்டில்ல படுக்கவெச்சு கண்ணை கிளீன் பண்ணினாங்க.  கண்ணை திறக்க சொல்லி சிரிஞ்சுலயோ எதுலயோ தண்ணிய பீச்சி அடிச்சாங்க. ஹய்யோ...  எனக்கென்னமோ அதுதான் பெரிய டார்ச்சரா  இருந்துச்சு. தண்ணில  மூழ்குனா மூச்சு முட்டுமே அது மாதிரி இருந்துச்சு. கண்ணுக்கும் மூக்குக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போல இருக்கு. என்னால கண்ணை திறக்கவே முடியல.அவங்க 'கண்ணை திறங்க மேடம்... கிளீன் பண்ணனும். கோ ஆபரேட் பண்ணுங்க ப்ளீஸ்'ன்னு சொல்றாங்க. நானும் முயற்சி பண்றேன். ம்ஹும்...என்னால முடியல. இதுக்கு இவ்ளோதான்னு அவங்களும் விட்டுட்டாங்க.

அப்பறம் ஆபரேஷன் ரூமுக்கு கூட்டிட்டு போனாங்க. செம கூலிங். உடம்பு உதறுது. லேசர் கதிர் பாயும்போது உதறிட்டா என்ன பண்றதுன்னு பயம். அப்படியெல்லாம் ஒண்ணும் பெருசா  பயப்படவேண்டாம். ஒண்ணும்  ஆகாதுன்னு சொல்லிட்டாங்க. படுக்க வெச்சு போர்வை போர்த்தி கை காலை அசைக்க வேணாம்னு சொல்லி முகத்துல ஒரு பிளாஸ்டிக் கவரை போடறாங்க. அதுல கண் பக்கம் கட்டிங் இருக்கு. அது வழியா கண்ணை ஓபனா வைச்சுக்கறாங்க. அப்ப ஒரு கிளிப் போடுவாங்க பாருங்க.... எனக்கு ஆபரேஷனே வேணாம்டா சாமின்னு ஆயிடுச்சு. ஆனா அப்படி ஒரு கிளிப் போட்டாதான் நாம கண்ணை மூடிக்காம  இருப்போம்.

(இந்த படம் தன கொஞ்சம் பயப்படுத்தாம இருந்துச்சு.)

அதுக்கப்பறம் கண்ணுல ஒரு சொட்டுமருந்து விடறாங்க. விட்டதும் அவங்க கண்ணுல கைய வெச்சா கூட தெரிய மாட்டேங்குது. முன்னெல்லாம் மரத்துபோக ஊசி போடுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். ஆனா இப்ப இப்படி சொட்டு மருந்து விட்டாலே போதும். அவங்க என்னென்ன பண்ணினாங்களோ அத்தனையும் பார்க்க முடியுது. ஆனா வலியே  தெரியறதில்லை. கண் கிட்ட என்னென்னமோ கொண்டு வராங்க. கண்ணுல வெச்சு என்னென்னமோ செய்யறாங்க. அதெல்லாம் நாம நம்ம சைடுல இருந்து பார்க்கற மாதிரி இருக்கு.

கண்ணுல இருந்து ஒரு படலத்தை தூக்கின மாதிரி இருந்துச்சு. அவ்ளோ தான்... கண் பார்வை அப்படியே பறிபோச்சு. பார்வை பறி  போகறதை 'பார்த்தேன்'னு தான் சொல்லணும்  அந்த கொஞ்ச செகண்ட்ஸ் நான் வேண்டாத தெய்வம் இல்லை. அப்பறம் அவங்க ஏதோ ஒண்ணு ... முறுக்கு பிழியற மெஷின் சின்ன சைஸ்ல இருக்கற மாதிரி ஒண்ணை வெச்சு கண்ணுல 10 செகண்ட்ஸ் அழுத்தினாங்க . கடவுளே.. அந்த வலியை மறக்கவே முடியாது. அதனால எப்பவெல்லாம் வலிக்குதுன்னு சொன்னேனோ அப்பவெல்லாம் அந்த சொட்டு மருந்தை போட்டுட்டே இருந்தாங்க. உடனே சரியா போய்டும். அப்பறம் பழையபடி அந்த படலத்தை மறுபடியும் செட் பண்ணினாங்க. முதலில் பச்சையும் மஞ்சளும் கலந்த ஆர்ட் மாதிரி உருவங்கள் தெரிஞ்சுச்சு. அப்பறம் மெதுவா தெளிவில்லாம ஒரிஜினல் கலரோட உருவங்கள் தெரிய ஆரம்பிச்சுச்சு. பழைய பார்வை மறுபடியும் கிடைசுச்சு. (இந்த போட்டோவ போடறப்ப தான் நான் உணர்ந்ததும் இந்த போட்டோல இருக்கறதும் ஒண்ணுன்னு தெரியுது.)
அதுக்கு அப்பறமா தான் லேசர் கதிரை  செட் பண்ணி கண்ணில் விடறாங்க. விடும்போது லேசர் ஷோவில் எல்லாம் காட்டுவார்களே... கசகசன்னு முக்கோணம் போன்ற வடிவத்தில் தெரியுது. கண்ணை அசைக்க கூடாதுன்னு நம்ம மனசே சொல்லும். ஷேப்ப கவனிக்காம லேசர் புள்ளியை மட்டும் பார்க்கணும். அனேகமா ரெண்டு நிமிஷத்துக்கு மேல ஆகல . வேலை முடிஞ்சுது. மறுபடி க்ளிப்பை கழட்டும்போது வலிக்கும். அவ்ளோ தான்.  அதே மாதிரி ரெண்டாவது கண்ணுக்கும் பண்ணினாங்க. மொத்தமாவே 20 நிமிஷம் தான் ஆயிருக்கும். இந்த பதிவு எழுத ஆன நேரத்தை விட குறைவு தான். அப்பறம் ரெண்டு கண்ணுலயும் ஒரு கால் மணி நேரத்துக்கு மூடியே வெச்சிருக்க சொன்னாங்க.

(தொடரும் )