Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Thursday, May 5, 2011

சில்ரன் ஆப் ஹெவன் (செருப்பை கேவலமா நினைக்காதீங்க)

'சில்ரன் ஆப் ஹெவன் ' படத்தை இப்போது தான் பார்த்து முடித்தேன். அதி அற்புதமான படங்களுள் ஒன்று என்பதை என்னாலும் மறுக்கவே  முடியாது. நிறைய பேர் மறுக்காததால தான் இந்த படம் பெஸ்ட் வெளிநாட்டு படம் னு ஆஸ்கர் அவார்ட் வாங்கி இருக்கு.  குழந்தைகள் உலகில் அவர்கள் பிரச்சனையை சமாளிக்கும் விதம், கோபம், ஏமாற்றம் என கலவையான விஷயங்களை கலந்து கட்டி இருக்கிறார் இயக்குனர். படத்தை பார்க்க ஆரம்பிக்கும்போது 'குழந்தைகள் பற்றிய படமா இருக்கே. மொக்க போட்டுட்டா என்ன பண்றது' என்ற எண்ணத்துடன் தான் பார்த்தேன். படம் முடியும்போது 'இந்த படத்தை போய் மிஸ் பண்ண பார்த்தேனே...' என்று என்னையே திட்டிக்கொண்டேன்.

கதை இதுதான்:
                         சுமார் பத்து வயதிருக்கும் அலிக்கு. அவன் தன் தங்கை சாராவின் செருப்பை தைத்துக்கொண்டு, காய்கறி கடையில் உள்ளே சென்று காய் வாங்கிக்கொண்டிருக்கிறான். காய்கறிக்கடை குப்பைகளை எடுத்துச்செல்லும் குப்பைவண்டிக்காரன், அலி வெளியில் வைத்துள்ள செருப்பு பையையும் குப்பை என்று எண்ணி எடுத்துச்சென்று விடுகிறான். காய் வாங்கிவிட்டு வெளியே வரும் அலி, செருப்பை காணாமல் தேடு தேடென்று தேடி, காய்கூடைகளை தள்ளிவிட்டு, கடைக்காரனிடம் திட்டு வாங்கி, எங்கும் செருப்பு கிடைக்காமல், வீடு வருகிறான். வீடு வந்ததும், செருப்பை கேட்கும் தங்கையிடம் அழுதுகொண்டே விவரத்தை கூறுகிறான். அவள் கோபம் வந்து அழுகையினூடே, 'அப்பாவிடம் சொல்லப்போகிறேன்' என்று மிரட்டுகிறாள். 'சொல்லு. சொன்னாலும் அப்பாவால என்னை அடிக்கத்தான் முடியும். உனக்கு புது செருப்பு வாங்கித்தர முடியாது' என்று குடும்பத்தின் ஏழ்மையை உணர்த்துகிறான். அதை உணர்ந்துகொள்ளும் சிறுமி சாரா, 'வேறென்ன செய்வது? ஸ்கூலுக்கு செருப்பு போடாமல் போக முடியாது தெரியுமா?' என்கிறாள். அலி 'என் ஷூவை போட்டுக்கொண்டு உன் காலைநேர ஸ்கூலுக்கு போ. ஸ்கூல் விட்டதும் அதை நான் போட்டுக்கொண்டு என் மதிய நேர ஸ்கூலுக்கு போறேன்' என்று சொல்லி, ஒரு புது பென்சிலை லஞ்சமாக தருகிறான். சாராவும் ஒப்புக்கொள்கிறாள்.
 
                           தினமும் காலை சாரா அண்ணனின் ஷூக்களை போட்டுக்கொண்டு நடந்து பள்ளிக்கு போவதும், மதியம் பள்ளி முடிந்ததும் ஓட்டமாக ஓடி வந்து, காத்துக்கொண்டிருக்கும் அண்ணனுக்கு ஷூக்களை திருப்பி தருவதும், அலி அவற்றை அணிந்துகொண்டு பள்ளிக்கு தாமதமாக போவதும் நடக்கிறது. இது எதுவுமே மஜீத்தில் வேலை செய்யும் அப்பாவுக்கும், நோயாளியாக இருக்கும் அம்மாவுக்கும், கைக்குழந்தையாக இருக்கும் கடைசி தங்கைக்கும் தெரியாது. 
                            பள்ளி செல்லும் சாரா டீச்சர் செருப்பை பற்றி பேசும்போது, தன் ஷூக்களை மறைக்க முயற்சி செய்வதும், டீச்சர் ஷூ போட்டவர்களை பாராட்டும்போது, தைரியமாக, முகத்தில் பெருமை பொங்க நிற்பதும் கவிதை. ஒரு நாள் பிரேயரில் எப்போதும் போல எல்லாருடைய ஷூக்களையும் ஏக்கத்துடன் பார்க்கும் சாரா, தன் பழைய செருப்புகளை  யாரோ ஒரு சிறுமி அணிந்திருப்பதை பார்த்து அதிர்கிறாள். லஞ்ச் ப்ரேக்கில், பள்ளி விட்டதும் என அவளை பின்தொடரும் சாரா அவள் வீட்டை கண்டுபிடித்து அண்ணனை கூட்டி வருகிறாள். அப்போது கதவு திறக்கிறது. உள்ளே இருந்து அந்த சிறுமியும் அவள் கண்ணில்லாத அப்பாவும் வெளியே வருகிறார்கள். இதை ஒளிந்திருந்து பார்க்கும் அலியும், சாராவும் பரிதாபப்பட்டு செருப்பை கேட்காமலே வீடு திரும்புகிறார்கள். 
 
                   அந்த சிறுமியின் அப்பா அன்று அவளுக்கு புது செருப்பை வாங்கித்தர, அவள் அம்மா மீண்டும் சாராவின் செருப்பை குப்பைவண்டிகாரனிடம் போட்டு விடுகிறாள்.  அடுத்த நாள் பள்ளியில் இருந்து வரும் வழியில் தவறவிட்ட பேனாவை சாராவிடம் திருப்பி கொடுத்து அந்த சிறுமி பிரெண்ட் ஆகிறாள். புது ஷூவை அணிந்து வரும் அவளிடம் பழைய ஷூவை பற்றி விசாரிக்கும் சாரா, 'அதை தூக்கிபோட்டு விட்டோம்' என்று அந்த சிறுமி சொன்னதும் 'ஏன்?' என்று உரிமையுடனும் கோபத்துடனும் கேட்பது அருமை. 'அது கிழிஞ்சுடுச்சு. அதான்' என்று அந்த சிறுமி பயந்துகொண்டே சொல்ல, அவளை சாரா மன்னிக்கிறாள்.
                
                 முதல் முறையாக தோட்ட வேலை செய்து பார்க்க செல்லும் தந்தையுடன், உதவிக்கு அலியும் போகிறான். பங்களாக்களாக இருக்கும் தெருவில் நுழைகிறார்கள். அங்கே ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒரு பொத்தான் உள்ளது. காலிங் பெல் போல. அதை அழுத்தி வீட்டில் உள்ளவர்களிடம் 'உங்களுக்கு தோட்ட வேலை செய்ய ஆள் வேண்டுமா?' என்று கேட்கிறார்கள். ஒரு வீட்டில் மட்டும் அழைக்கப்படுகிறார்கள். அலி அந்த வீட்டில் உள்ள சிறுவனுடன் விளையாட, அவன் அப்பா தோட்ட வேலை செய்கிறார். சிறுவனின் தாத்தா கைநிறைய பணம் தர, அலிக்கும் அவன் அப்பாவுக்கும் பெருமகிழ்ச்சி. சைக்கிளில் வர வர என்னென்ன பொருள்களை வாங்கலாம் என்று அப்பா லிஸ்ட் போட, அதில் சாராவுக்கு ஒரு ஜோடி ஷூக்களை வாங்க சொல்லி சிபாரிசு செய்கிறான் அலி. இப்படியே பேசிக்கொண்டு வருகையில், சைக்கிளில் ப்ரேக் வேலை செய்யாமல் போக, இருவரும் கீழே விழுந்து, சைக்கிள் உடைந்து, அதையும் ஏற்றிக்கொண்டு ஒரு மினிடோரில் வீடு வந்து சேர்கிறார்கள். வாங்கிய காசானது , இந்த செலவு, மருத்துவ செலவு, கடனை திருப்பித்தர வேண்டிய நிலை போன்றவற்றிலேயே வெகுவாக குறைந்துவிட, ஏமாற்றத்துடன் உறங்குகிறான் அலி.

                          அடுத்த நாள் பள்ளியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ளப் போகிறவர்களின் பட்டியல் வெளியாகிறது. கூடவே பரிசு பற்றிய அறிவிப்பும். தன் கிழிந்த ஷூக்களை கொண்டு போட்டியில் பங்குபெறுவதை தவிர்த்த அலி, மூன்றாவது பரிசாக ஷூக்கள் கிடைக்கும் என்பதை அறிந்ததும், விளையாட்டு ஆசிரியரிடம் போய் அழுது, கெஞ்சி கூத்தாடி, ஜெயிப்பேன் என்று சத்தியம் வேறு செய்கிறான். இவன் பிடிவாதத்தையும் உறுதியையும் பார்த்து இவனை ஓட வைத்து பார்க்கும் அவர், இவன் தகுதியானவன் என்று பந்தயத்தில் இவனையும் சேர்த்துக்கொள்கிறார்.
                          வீட்டுக்கு மகிழ்ச்சியுடன் வந்து தங்கையிடம் விஷயத்தை சொல்ல, அவள் 'பசங்க போட்டுக்கற ஷூ எனக்கு பிடிக்காது' என்கிறாள். 'ஷூவை கடையில் குடுத்து மாற்றிக்கொள்ளலாம்' என ஆறுதல் சொல்லும் அலியிடம் 'நீ முதல் பரிசு ஜெயித்து விட்டால் என்ன செய்வது?' என்று கேட்க, 'இல்லை, நான் மூன்றாம் பரிசு மட்டுமே ஜெயிப்பேன்' என்று உறுதி கூறுகிறான். 
போட்டி நடக்கும் இடத்தில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் பலவிதமாக தங்களை தயார் படுத்திக்கொண்டிருக்கிறார்கள், விதவிதமான ஷூக்களை அணிந்து. மனதிற்குள் தன்னை வலுவேற்றிக்கொண்டு போட்டியில் கலந்து கொள்கிறான் அலி.
 
மிகுந்த முயற்ச்சிக்கு பின் எல்லோரையும் பின்னுக்கு தள்ளிக்கொண்டு ஓடும் அலி, தனக்கு முன்னே யாரும் இல்லாததை கண்டு மெதுவாக இரண்டு பேரை மட்டும் முன்னே விடுகிறான். மூன்றாவதாக வரும் இவனை ஒரு பையன் தள்ளி விட, வேறு வழியின்றி இன்னும் வேகமாக ஓடுகிறான். பின்னணியாக வெறும் ஷூக்களின் சப்தங்களும், அலியின் மூச்சிரைப்பும், சில இடங்களில்  ஷூ சம்பந்தமாக தங்கையின் வார்த்தைகளும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது அற்புதம். ஒரு வழியாக வெற்றிக்கோட்டை தொட்டதும் அவன் கேட்கும் ஒரே கேள்வி 'மூன்றாவதா சார்?' என்பது தான். 'மூணாவதா? நீ முதல் பரிசே ஜெயிச்சுட்ட' என்று விளையாட்டு ஆசிரியர் சொல்ல, அப்போதிலிருந்து அலியின் கண்களில் கண்ணீர் வர தொடங்குகிறது. போட்டோக்ராபர் அலியை தனியாக எடுக்கும் போட்டோவின் பின்னணியில் உள்ளது ஒரு ஜோடி ஷூ. 

                   அடுத்த காட்சியில் அலியின் அப்பா, அலிக்கும் சாராவுக்கும் புது ஷூக்களை கடையில் வாங்கிக்கொண்டு வீடு வருகிறார். இதை அறியாமல் வீட்டில் தங்கச்சி பாப்பாவுக்காக பால் பாட்டில் கழுவிக்கொண்டிருக்கும் சாரா கதவை யாரோ திறக்கும் சப்தம் கேட்டு திரும்பி பார்க்கிறாள். அலி தொங்கிய முகத்துடன் உள்ளே வருகிறான். இவளருகில் வந்ததும் தலைகுனிந்தவாறு ஒரு பெருமூச்சு விடுகிறான். ஷூ கிடைக்கவில்லை என்று புரிந்துகொண்ட சாராவை தங்கையின் அழுகுரல் அழைக்கிறது. உள்ளே ஓடி விடுகிறாள். தண்ணீர்தொட்டி அருகில் உட்கார்ந்து தன் கிழிந்து, பிய்ந்து போன ஷூவை தூக்கி எறியும் அலி, சாக்ஸை கழற்றுகிறான். கால் கொப்புளங்களாலும், புண்கள் நிறைந்தும் இருக்கிறது. கால்களை தண்ணீர் தொட்டிக்குள் வைத்துக்கொள்ள, அதில் உள்ள மீன்கள் அலியின் கால்களை சுற்றுகின்றன. இத்துடன் படம் நிறைவடைகிறது.
 
                   வார்த்தைகளால் இந்த கதையை அறிவதை விட, விஷுவலாய் பார்க்கும்போது மனம் கனக்கிறது. பள்ளி செல்லும் வழியில் அண்ணனின் பெரிய சைஸ் ஷூ சாக்கடையில் விழுந்துவிட, அங்கே துடித்துக்கொண்டு ஷூவின் பின்னே செல்வது சாரா மட்டுமல்ல நாமும் தான். லேட்டாக வந்து ஹெச்.எம்மிடம் மாட்டிக்கொள்ள கூடாது என்று நினைப்பது அலி மட்டுமல்ல. நாமும் தான். ஓட்ட பந்தயத்தில் அலி ஓடியே ஆக வேண்டும் என்று நாமும் தான் அவனுடன் ஓடுவோம். இந்த வரிகளை படம் பார்த்த அனைவரும் நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள். அருமையான படம். நீங்களும் பாருங்கள்.. 

14 comments:

மாணவன் said...

விமர்சன பகிர்வுக்கு நன்றிங்க... :)

வெங்கட் நாகராஜ் said...

ஒரு அற்புதமான படம் பற்றிய தகவலுக்கு நன்றி.

Moni said...

அற்புதமான படம்.. நல்ல விமர்சனம்...

எப்பவுமே ஈரானிய படங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை.. The Wind will carry us.. பார்த்திட்டிங்களா..?? இல்லாட்டி பாருங்க..

மேலும் எழுதுங்கள்..

Muruganandan M.K. said...

மிக அருமையான படம். உங்கள் பதிவைப படித்த பிறகு மீண்டும் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.தி வே பக் பார்தீர்களா. அது போன்ற உச்சமான படம் அல்ல. ஆயினும் பார்க்க வேண்டியதுhttp://suvaithacinema.blogspot.com/2011/05/way-back.html

Anonymous said...

விமர்சனம் நல்லா இருக்கு. படமும் நல்லா இருக்கும்னு நினைக்கறேன். ஆனா நீங்க முழு படத்தோட கதையும் சொல்லிடீங்க, கடைசி 25% கதைய சொல்லாம விட்டுருக்கலாம் :(

சரி பரவால ஸ்க்ரீன்பிளேகாக பாப்போம், என்ன பண்ணிருவானுங்க.

-அசாதாரணமானவன்-

சி.பி.செந்தில்குமார் said...

விமர்சனம் நீட் மேடம்

சி.பி.செந்தில்குமார் said...

>>சமயத்தில் மாடர்னாகவும் சமயத்தில் கட்டுபெட்டியாகவும் இருக்க பிடித்த ஒரு பெண்ணின் பார்வை தான் இது.

ரசித்தேன்

ஈரோடு கதிர் said...

அலி ஓடும் போதெல்லாம் நமக்கும் மூச்சு வாங்கும்!

கலங்கடித்த படம்!

சாதாரணமானவள் said...

@ மாணவன், வெங்கட் நாகராஜ், சி.பி.செந்தில்குமார்
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிகள்

சாதாரணமானவள் said...

@ moni
படம் கிடைத்தால் நிச்சயம் பார்க்கிறேன். கருத்துக்கு நன்றிங்க..

சாதாரணமானவள் said...

@ எம்.கே. முருகானந்தன்
//தி வே பக் பார்தீர்களா.//
அப்படியா? அந்த படமும் கிடைத்தால் பார்க்கிறேன் சார்

சாதாரணமானவள் said...

@ அசாதாரணமானவன்
//நீங்க முழு படத்தோட கதையும் சொல்லிடீங்க, கடைசி 25% கதைய சொல்லாம விட்டுருக்கலாம் :(//
இதை படிக்கறவங்களுக்கு அந்த படம் கிடைக்காட்டி கிளைமாக்ஸ் தெரிஞ்சுகாமலே போயிடும்ல. அதனால தான முழு கதையும் போட்டேன்.

சுபத்ரா said...

அழகான விமர்சனம் தோழி!

R. Gopi said...

Very well written.

ஆனா முழுக்கதையும் சொல்லக் கூடாது:-))